மும்பை: யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சமீப காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் பிசிசிஐ-யின் புதிய விதிகள் பற்றி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசி இருக்கிறார். சமீபத்தில் பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்று இனி வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என்பது ஆகும்.
அது பற்றி பேசி இருக்கும் யோக்ராஜ் சிங் மனைவிகளுக்கு கிரிக்கெட்டை பற்றி தெரியாது. மனைவி, சமையல்காரர்கள் ஆகியோரை அழைத்து செல்வது சுமை தான். எனவே, பிசிசிஐ எடுத்த முடிவு சரிதான் என்று கூறி இருக்கிறார். இது பற்றி யோக்ராஜ் சிங் என்ன பேசினார் என்று இங்கே பார்க்கலாம்.

"ஒரு வீரர் அணியுடன் பயணம் செய்யும்போது எதற்காக குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டும்? அது உங்கள் கவனத்தை குலைக்கும். நீங்கள் ஓய்வு பெற்ற பின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் நாட்டுக்காக ஆடும்போது சமையல்காரர்கள் மற்றும் குடும்பத்தினரை உங்களுடன் அழைத்துச் சென்றால் அது உங்களுக்கு சுமையாகவே இருக்கும்."
"மனைவிகளுக்கு கிரிக்கெட்டை பற்றி தெரியாது. எதற்காக உங்கள் குழந்தைகளும், மனைவிகளும் அங்கே இருக்க வேண்டும்? நீங்கள் விளையாடும் போது அணி தான் உங்களின் குடும்பம். எனவே, குடும்பத்தினர் அங்கே தேவையில்லை. நான் அதற்கு எதிரானவன்." இவ்வாறு யோக்ராஜ் சிங் கூறி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு யோக்ராஜ் சிங் கபில் தேவை தான் சுட்டு வீழ்த்த முடிவு செய்து துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். தன்னை அணியில் தேர்வு செய்யாததால் தான் கோபமடைந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவின் வீட்டுக்கு சென்றதாக கூறி இருந்தார்.
கபில் தேவின் தலையில் துப்பாக்கியால் சுட நினைத்ததாகவும், அப்போது கபில் தேவின் தாயார் உடன் இருந்ததால் எச்சரித்து விட்டு வந்ததாகவும் கூறி இருந்தார். இந்த தகவல் உண்மையா? என்பதை கபில் தேவ் தெளிவுபடுத்த மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.