துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்ற நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை பாகிஸ்தான் ரசிகர்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர். இந்திய அணி கோப்பை வென்ற பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை.
தொடரை நடத்துவது பாகிஸ்தான் தான். என்னதான் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாமல் துபாயில் நடைபெற்றாலும், அந்த தொடரை நடத்தும் கிரிக்கெட் அமைப்பு என்ற முறையில் அவர்கள்தான் முன் நின்று பரிசளிப்பு விழாவை நடத்தி இருக்க வேண்டும். அவர்கள் ஐசிசி தலைவர் ஜெய் ஷா உடன் இணைந்து கோப்பையை இந்திய அணிக்கு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. இது முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து "எதற்காக தொடரை நடத்துகிறீர்கள்?" என பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால். இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல மறுத்ததால், இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொண்டது. அதை பாகிஸ்தானை சேர்ந்த பலரும் விமர்சித்து வந்தனர். எனினும், ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அந்த போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்பதும் உறுதியாகிவிட்டது.
அப்படி இருக்க இந்திய அணி கோப்பை வென்ற போது, தங்களின் மனக்கசப்பை எல்லாம் மறந்துவிட்டு கோப்பை வழங்கும் நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பங்கேற்று இருக்க வேண்டும். "நாங்கள்தான் இந்த தொடரை நடத்துகிறோம்" என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஏற்கனவே, இந்த தொடரில் பாகிஸ்தானில் நடைபெற இருந்த மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. மேலும், மைதானத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் வரவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக மாறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் குரூப் சுற்றுடன் வெளியேறியது. இப்படி பல்வேறு பின்னடைவுகள் இருக்கும் நிலையில், இந்த தொடரை இரண்டு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டோம் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பதிவு செய்யும் வகையில், பரிசளிப்பு விழாவில் பங்கேற்று அதை முடித்திருக்க வேண்டும்.
ஆனால், பிசிசிஐ தலைவர் ஸ்டூவர்ட் பின்னி மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா முன் நின்று பரிசளிப்பு விழாவை நடத்தினர். அப்படி என்றால் இந்த தொடரை நடத்தியது இந்தியாவா? என்பது போன்ற ஒரு பார்வையும் எழுகிறது. இதை சுட்டிக்காட்டி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பை விளாசி வருகின்றனர்.