லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமையை சுட்டிக்காட்டி, இந்த கிரிக்கெட் தொடரை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பை விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட்.
தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதி:
இந்த முறை 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்திய அணி ஆடும் விளையாட்டுப் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் சிக்கலை ஏற்படுத்திய விஷயம் என்னவெனில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அந்தப் போட்டிகளும் துபாயில் தான் நடைபெறும், இந்தியா தோல்வி அடைந்தால் அந்தப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்ற நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தது. இந்தியா இடம் பெறாத மற்றொரு அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்று போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாய்க்கு கிளம்பிச் சென்றன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதியில் மோதும் என்றும், இந்தியா தோல்வி அடைந்து இருந்தால் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் என்ற நிலை இருந்தது. அதனால் இரண்டு அணிகளும் துபாய்க்கு அனுப்பப்பட்டன.
இந்திய அணி வெற்றி பெற்றதால், தென்னாப்பிரிக்கா உடனடியாக துபாயில் இருந்து இரண்டாவது அரையிறுதி நடைபெற இருந்த லாகூருக்கு பயணம் செய்தது. இது தேவையற்ற ஒரு பயணமாகவே தென்னாப்பிரிக்காவுக்கு இருந்தது. சுமார் 18 மணி நேர இடைவெளியில் துபாய்க்கு சென்றுவிட்டு பின் மீண்டும் அங்கிருந்து லாகூருக்கு தென்னாப்பிரிக்க அணி பயணம் செய்தது. அங்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது அரையிறுதியில் மோதியது தென்னாப்பிரிக்கா.

டேவிட் லாய்ட் விமர்சனம்:
இது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் மிக மோசமாக இதை விமர்சித்து இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இது உலகின் மிகப்பெரிய, முக்கியமான கிரிக்கெட் தொடர். ஆனால், இது பற்றி வெளியே சொல்லவே சங்கடமாக இருக்கிறது. இந்தத் தொடருக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் கேலிக்கூத்தாக இருந்தன."
"இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் (தென்னாப்பிரிக்காவின் துபாய் பயணம்) என்பதே நகைப்புக்குரிய வகையில் இருந்தது. இதை எப்படி விவரிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமானது. இதை வேறு எப்படி நாம் சொல்ல முடியும்? இது ஒரு உலக கிரிக்கெட் தொடர். ஒரு அணி இங்கிருந்து அங்கே செல்கிறது, நீங்கள் அங்கே விளையாடுவீர்கள் என்கிறார்கள், நீங்கள் அங்கு விளையாட மாட்டீர்கள் என்கிறார்கள், பின் நீங்கள் மீண்டும் வந்த இடத்துக்கே செல்ல வேண்டும் என்கிறார்கள்."
"நான் நகைச்சுவையை விரும்புபவன், இது எனக்கு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ஆனால். அங்கு அந்த வீரர்களில் ஒருவராக நான் இருந்தால் இது எனக்கு நகைச்சுவையாக இருக்காது" என்று விமர்சித்து இருக்கிறார் டேவிட் லாய்ட்.
எங்கே நடந்தது தவறு?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய முதல் அரையிறுதிப் போட்டியை மார்ச் 4ஆம் தேதி நடத்துவதற்கு பதிலாக ஐந்தாம் தேதி நடத்தி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்காது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு அந்த இடத்தில் தான் சொதப்பிவிட்டது.
மார்ச் 2 அன்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் விளையாடியது. அன்றிலிருந்து இரண்டாவது நாளே (மார்ச் 4) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் அரையிறுதியில் மோதின. இந்தத் திட்டமிடல் தான் இத்தனை பெரிய குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. தென்னாப்பிரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திலும் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த பயண ஏற்பாடுகள் சோர்வை ஏற்படுத்தியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் மூத்த வீரர் டேவிட் மில்லர் தோல்விக்கு பிறகு இதைப் பற்றி சுட்டிக்காட்டி இருக்கிறார். "நாங்கள் குரூப் சுற்று போட்டி முடிந்தவுடன் மாலை 4 மணிக்கு துபாய்க்கு பயணம் செய்தோம். பின்னர் மறுநாள் காலை 7.30க்கு அங்கிருந்து லாகூருக்கு வந்தோம். இது முற்றிலும் தேவையற்ற ஒரு பயணமாக இருந்தது," என்றார்.