கோஹ்லிக்கு ஒரு செம சான்ஸ் நாளை காத்திருக்கு!
லண்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான நாளைய இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க இரு நாட்டு ரசிகர்களும் தடபுடலாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் டோணி இடையே ஒரு குட்டி போட்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
டோணி செய்த சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி என்பதுதான் அந்த குட்டி போட்டி. இதைக் காணவும் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே வான வேடிக்கைதான். இறுதிப் போட்டி என்றால் சொல்லவா வேண்டும்.. வறுகடலை, அவிச்ச கடலை, முருக்கு (இத்யாதி இத்யாதி) சகிதம் கிராமத்து டூரிங் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது போல மேட்ச் பார்க்கிறவங்கதான் நம்ம "பயக".

இதோ ஒரு பைனல்
மீண்டும் ஒரு பைனலில் இந்தியா பாகிஸ்தான் வந்து நிற்கின்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு காணக் கிடைக்காத ஒரு காட்சி. இதைக் கண்டு களிக்க இரு நாட்டு ரசிகர்களும் உலகம் முழுவதும் ஆயத்தமாகி வருகின்றனர்.

கோஹ்லிக்கு ஒரு செம சான்ஸ்
எல்லோருக்கும் இது ஒரு பைனல் என்றால் கோஹ்லிக்கு இது வரலாறு படைக்க கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். அந்த வரலாற்றை நாளை அவர் படைப்பாரா என்று கோஹ்லி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கேப்டனாக முதல் போட்டி
கோஹ்லியைப் பொறுத்தவரை கேப்டனாக அவருக்கு இது முதல் ஐசிசி இறுதிப் போட்டி. இதில் இந்தியா வென்று கோப்பையைக் கைப்பற்றினால் கோஹ்லிக்கு தனிப்பட்ட முறையில் அது வரலாறாக மாறும்.

அன்று டோணி
இதே பாகிஸ்தானுக்கு எதிராக 2007ம் ஆண்டு நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டோணி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது. அது டோணிக்கு கேப்டனாக முதல் ஐசிசி இறுதிப் போட்டியாகும்.

நாளை கோஹ்லி?
அதேபோலவே நாளை நடைபெறும் இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இந்தியா, கோஹ்லிக்கு கேப்டனாக இது முதல் ஐசிசி இறுதிப் போட்டி. எனவே டோணியைப் போலவே கோஹ்லியும் சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தல பாதையில் தளபதியும் வீறு நடை போடுவாரா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications