துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வந்த நிலையில், நியூசிலாந்து அணியின் பவுலர்கள் அடுத்தடுத்து 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி கொடுத்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன்பின் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக தொடங்கியது.

சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில், சிறந்த கம்பெனியை அளித்தார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், கிளென் பிலிப்ஸ்-ன் அபார ஃபீல்டிங்கால் சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ரசிகர்களின் கரகோஷத்திற்கு இடையே விராட் கோலி களம் புகுந்தார்.
கோல்டன் பேட்டுக்கான ரேஸில் விராட் கோலி இருந்ததால், இந்த ஆட்டத்தில் விராட் கோலி பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி வெறும் 1 ரன்னில் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் பிளம் விக்கெட்டுக்கு டிஆர்எஸ் அப்பீல் கோரி மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தினார்.
இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த நிலையில், 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணிக்கு கம்பேக்காக மாறியது. இதனால் உற்சாகமடைந்த நியூசிலாந்து பவுலர்கள் அட்டாக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அதேபோல் விராட் கோலியின் கோல்டன் பேட் கனவும் தகர்ந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெறும் 1 ரன்னை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ளார். இதனால் அதிக ரன்கள் விளாசிய வீரர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் பேட் விருதினை இம்முறை ரச்சின் ரவீந்திரா கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.