மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு எடுத்து செல்ல பிசிபி முடிவு செய்து அறிவித்த நிலையில், பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்றுப்பயணத்திற்கான அனுமதியை ஐசிசி ரத்து செய்து அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டுக்கு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு மத்திய அரசு தரப்பில் பிசிசிஐ-க்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தினால், பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதில் இருந்து விலகும் என்று ஐசிசியிடம் கூறியது. இப்படி இரு நாடுகளும் பல்வேறு சிக்கல்களை கொடுத்து வருவதால், இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை.
சில நாட்களுக்கு முன் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தொடங்கவுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி இஸ்லாமாபாத் நகரில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பயணம், பல்வேறு நகரங்களுக்கும் செல்லவுள்ளது.
அதில் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கர்டு, முர்ரி, ஹன்சா மற்றும் முசாஃபராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்து. இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில் உடனடியாக ஐசிசியிடம் முறையிடப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிசிபி தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பயணத்தை ரத்து செய்து ஐசிசி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.