துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை. மேலும் அனுபவ வீரரான சிராஜும் இந்தத் தொடரில் சேர்க்கப்படவில்லை.
நீண்ட காயத்திற்கு பிறகு இந்திய அணிக்கு முகமது ஷமி திரும்பியிருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த ஆர்ஸ்தீப் சிங்கும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் முகமது சமியும், ஹர்ஷித் ரானாவுக்கும் தான் இந்திய பிளேயிங் லெவனின் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய பந்துவீச்சை தொடங்கினர். முகமது சமி தன்னுடைய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சை வீசினார். முதல் ஓவரையே முகமது சமி கட்டுக்கோப்பாக செயல்பட, வங்கதேச வீரர்கள் தடுமாறினர்.
குறிப்பாக வங்கதேச அணியின் அதிரடி வீரர் சௌமியா சர்க்கார் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆட முற்பட்டபோது, அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுல் இடம் கேட்ச் ஆனது. இதனை அடுத்து இந்திய அணி முதல் ரன்னில் முதல் விக்கெட்டை எடுத்தது. இதன் பிறகு ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை ஐபிஎல் ஸ்டார் ஹர்ஷித் ரானா வீசினார்.
ஐசிசி தொடரில் ஹர்சித் ராணா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரும் அபாரமாக பந்து வீசி வங்கதேசத்துக்கு நெருக்கடி கொடுத்தார். குறிப்பாக வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் சாண்டோ, ஹர்சித் ராணாவின் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டார். அது ஃபீல்டரிடமே கேட்ச் ஆனது.
இதை அடுத்து அவரும் டக்அவுட் ஆகி வெளியேற வங்கதேச அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை எடுக்க வேண்டும் என பொறுமையின்றி தேவையில்லாத ஷாட்டுகளை ஆட முற்பட்டதே விக்கெடுகள் விழுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.