துபாய்: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் அடித்த பந்தை நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் அபாரமாக சிறுத்தை போல் பாய்ந்து கேட்ச் பிடித்த சம்பவம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. இதனால் சுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து சோகமாக பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய பிரேஸ்வெல் மற்றும் டேரல் மிட்சல் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே சிக்ஸ் அடித்து ரோஹித் சர்மா ரன் குவிப்பை தொடங்கி வைத்தார். இதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டினார்.
மறுபக்கம் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில் அரைசதத்தை விளாசி அசத்தினார். தொடர்ந்து முதல் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து சென்றது. தொடர்ந்து ஸ்பின்னர்கள் அடுத்தடுத்து அட்டாக் செய்தனர். இந்த நிலையில் 19வது ஓவரை வீச சான்ட்னர் அட்டாக்கில் வந்தார்.
அவர் வீசிய 4வது பந்தை சுப்மன் கில் எளிதாக கவர்ஸ் திசையில் உள்ள ஃபீல்டரை கடந்து செல்லும் வகையில் கொஞ்சம் தூக்கி அடித்தார். ஆனால் கவர்ஸ் திசையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் திடீரென ஒற்றை கையால் அந்த பந்தை பிடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் மீண்டும் ரீப்ளேவுக்கு காத்திருந்தனர்.
கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்சை பார்த்த சுப்மன் கில் ஒரு நிமிடம் உறைந்துபோய் களத்தில் நின்றார். இதன்பின் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சோகமாக பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். ஏற்கனவே நியூசிலாந்து அணியுடன் ஆடிய லீக் போட்டியின் போது விராட் கோலிக்கு அபாரமான ஒரு கேட்சை கிளென் பிலிப்ஸ் பிடித்திருந்தார்.
அந்த கேட்சை விடவும் சுப்மன் கில்லுக்கு பிடித்த கேட்ச் மிரட்டலாக அமைந்தது. இதனால் கிளென் பிலிப்ஸ் மனிதன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்திய அணி ரசிகர்கள் சோகமடைந்தாலும், கிளென் பிலிப்ஸ் கேட்ச் வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.