துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய பார்த்த இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், குழந்தையை போல் மாறி சில நிமிடங்கள் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் ஒரு குடும்பத்தின் மூத்த மனிதரை போல் நின்று இந்திய அணியின் வெற்றியை நினைத்து பெருமை கொள்வதாக சுனில் கவாஸ்கர் நெகிழ்ந்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 3வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 49 ஓவர்களில் சேஸிங் செய்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் மைதானத்தில் இந்திய அணியின் கொண்டாட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதேபோல் இந்திய அணியின் வெற்றியையும், கொண்டாட்டத்தையும் ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் தொகுப்பாளர் மயான்தி லாங்கர், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா உள்ளிட்டோர் வர்ணனை செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி கோப்பையை வென்ற போது, சுனில் கவாஸ்கர் தன்னை மீறி களத்திலேயே குழந்தையை போல் டான்ஸ் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். அந்த டான்ஸ் ஆடிய பின் சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய கிரிக்கெட் குடும்பத்தின் மூத்தவன் நான்தான்.
ஒரு குடும்பத்தில் மூத்த மனிதர் தனது மகனின், பேரனின் வெற்றியை பார்த்து பெருமை கொள்வது, இந்திய அணியின் இந்த வெற்றி எனக்கு பெருமிதத்தை கொடுக்கிறது. இந்த நிமிடம் மகிழ்ச்சியாக உள்ளேன். ஒரு முன்னாள் வீரராக இப்படியான காட்சிகளையே பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். சுனில் கவாஸ்கரின் வார்த்தைகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அவர் டான்ஸ் ஆடிய வீடியோவும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்திய அணி தோல்வியடையும் போது காட்டமான விமர்சனங்களை வைப்பவர் சுனில் கவாஸ்கர் தான். அதேபோல் வெற்றியின் போது முதல் மனிதராக பாராட்டி கொண்டாடும் மனிதராகவும் சுனில் கவாஸ்கர் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையையும் அதிகரித்துள்ளது.