துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த கோப்பையை ஐசிசி தலைவர் ஜெய் ஷா கையில் இருந்து பெற்று கொண்ட இந்திய வீரர்கள் உற்சாகமாக புகைப்படங்களை எடுத்தனர். ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிரித்த முகத்துடன் ஒரு ஓரமாக யாரோ ஒருவரை போல் நின்ற காட்சிகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலமாக 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இதன்பின் ஐசிசி தலைவர் ஜெய் ஷா கைகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை பெற்றுக் கொள்ள, பின்னர் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்சித் ராணா உள்ளிட்டோர் மாற்றி மாற்றி கோப்பையுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து Champions போர்டு முன்பாக இந்திய அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதுவரை இந்திய அணியின் பயிற்சியாளர்கள் அருகில் கூட வரவில்லை. குழு புகைப்படத்திற்கு மட்டும் வந்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.
அதன்பின் மீண்டும் ஓய்வறைக்கு சென்றனர். கவுதம் கம்பீரின் இந்த செயல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கம்பீர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்திய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
அதேபோல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதனால் கம்பீர் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடமையை செய்; பலனை எதிர்ப்பார்க்காதே என்ற நோக்கில் கோப்பையை கூட கம்பீர் கைகளில் வாங்கி கொண்டாடாமல் இருந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.