லாகூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் கிளாசன் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் இறுதிப்போட்டிக்கு கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 102 ரன்களும் விளாசினர்.

இதன்பின் 365 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருந்தாலும், கிளாசனின் ஆட்டமே போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் என்று பார்க்கப்பட்டது. தொடக்க வீரர் ரிக்கல்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் கேப்டன் பவுமா - வான் டர் டூசன் கூட்டணி இணைந்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
சிறப்பாக ஆடிய பவுமா 71 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வான் டர் டூசன் 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் மொத்த பொறுப்பும் மார்க்ரம் - கிளாசன் கைகளில் அளிக்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் பேட்டிங் செய்ய களமிறங்கிய பின் உடனடியாக சான்ட்னர் பவுலிங் செய்ய வந்தார்.
அவர் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடிக்க முயற்சித்து லாங் ஆஃப் திசையில் நின்றி மேட் ஹென்றி கைகளில் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஸ்பின்னர்களிடம் கிளாசன் அதிகமாக விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்.
நியூசிலாந்து அணியை போல் 40 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய பின், கடைசி நேரத்தில் அதிரடிக்கு திரும்பாமல் கிளாசன் டி20 கிரிக்கெட்டை போல் களமிறங்கிய உடன் அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.