கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் கோலாகலமாக பாகிஸ்தானில் தொடங்கி இருக்கிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் திரும்புகிறது.
கராச்சியில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறோம்.

இங்கு நடைபெற்ற கடைசி சில போட்டிகளில் பனிப்பொழிவு இரவு நேரத்தில் அதிகமாக இருந்தது. எனவே முதலில் பந்து வீசும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நாங்கள் நடப்புச் சாம்பியன் ஆக இந்த தொடரில் களமிறங்குகிறோம். இது எங்களுக்கு கூடுதல் நெருக்கடியை தான் தருகின்றது.
எனினும் இதை நாங்கள் ஒரு முத்தரப்பு தொடர் போட்டியாக கருதுகிறோம். பாகிஸ்தானில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இதேபோன்று முத்தரப்பு தொடரில் இடம் பெறாத ஹரிஷ் ரவுப், எங்கள் அணியில் திரும்பி இருக்கிறார்.
இது எங்களுடைய பலத்தை அதிகரித்து இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்னர், இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் பேட்டிங்கில் நாங்கள் எங்களுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும். ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
எங்களுடைய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இளம் வீரர்களும் கலந்த கலவையாக இருக்கிறார்கள். நாங்கள் கடந்த சில காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகின்றோம். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக அளவு போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் எப்படி செயல்படுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதேபோன்று கராச்சியில் விளையாடிய அனுபவமும் எங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது துரதிஷ்டவசமானது. எனினும் எங்களுடைய அணி வீரர்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். இன்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா இடம் பெறவில்லை. மாட் ஹென்றி அணிக்கு திரும்பி இருக்கிறார் என சான்ட்னர் கூறியுள்ளார்.