பாகிஸ்தான் டீமுக்குள் பெரிய பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு பாஸ்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கு தேவையில்லாமல் யாரும் அட்வைஸ் தரக் கூடாது என்று அணியின் மூத்த வீரர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் கேப்டனுக்கும், சீனியர் வீரர்கள் சிலருக்கும் இடையே பூசல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மாதிரிதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும். கேப்டன் சொல்வதை சீனியர்கள் கேட்க மாட்டார்கள். சீனியர்கள் ஆலோசனையை கேப்டன் கேட்கவே மாட்டார். இந்த பஞ்சாயத்து நீண்ட காலமாகவே உள்ளது.
இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரிலும் கூட இந்த பூசல் வெடித்துள்ளதாக தெரிகிறது. கேப்டனுக்கு தேவையில்லாமல் சீனியர்கள் அட்வைஸ் தரக் கூடாது என்று தடை உத்தரவே பிறப்பிக்கும் அளவுக்கு மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முகம்மது ஹபீஸ் தகவல்
இந்த மேட்டர் முகம்மது ஹபீஸ் மூலம் வெளியாகியுள்ளது. அணியின் மூத்த வீரர்களில் இவரும் ஒருவர். முன்னாள் கேப்டனும் கூட. மூத்த வீரர்கள் யாரும், கேப்டனுக்கு அட்வைஸ் தரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கேப்டன் கேட்டால் மட்டுமே ஆலோசனை கூறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வக்கார் காலத்தில் எடுக்கப்பட்டது
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இது புதிதான ஒன்று அல்ல. வக்கார் யூனிஸ் பயிற்சியாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுதான். அது இப்போதும் தொடர்கிறது. கேப்டன் கேட்டுக் கொண்டால் மட்டுமே அட்வைஸ் தருவது என்பது ஒரு உடன்பாடாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கேப்டன் - பயிற்சியாளர் மட்டுமே
வீரர்கள் தேர்வை கேப்டனும், தலைமைப் பயிற்சியாளரும் மட்டுமே இணைந்து தீர்மானிப்பது என்பது இன்னொரு கொள்கை முடிவு. அதில் மூத்த வீரர்கள் தாங்களாக அட்வைஸ் தரக் கூடாது என்பது இன்னொரு முடிவு என்றார் ஹபீஸ்.

மிக்கி ஆர்தர் உத்தரவு
முன்னதாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததே பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்தான் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹபீஸ் மூலம் விளக்கம் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவுடன் தோல்வி
இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. இது அந்த நாட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்து விட்டது. நூற்றுக்கணக்கனான டிவிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. மேலும் கேப்டன் சர்பிராஸ் அகமது, மூத்த வீரர்களுடன் ஆலோசனை நடத்துவதில்லை என்ற புகாரும் எழுந்தது.

தேவையில்லாத ஆணி
இந்த நிலையில்தான் தேவையில்லாத அட்வைஸ் தேவையில்லை என்ற புதிய கொள்கை முடிவை பாகிஸ்தான் அணி கடைப்பிடிக்கும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதையும் ஒரு மூத்த வீரரை விட்டே வெளிப்படுத்தியுள்ளது கிரிக்கெட் வாரியம்.


Click it and Unblock the Notifications