சென்னை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் ஏதேனும் காயம் அடைந்து மாற்ற வேண்டும் என்றால் அதனை பிப்ரவரி 11-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி இறுதி கெடு விதித்து இருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களமிறங்குவது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் பும்ராவுக்கு பதில் சிராஜை சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "அனைவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வருண் சக்கரவர்த்தியை சேர்த்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்".
"என்னை பொறுத்தவரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். ஏனென்றால் தற்போது அனைத்து அணிகளும் தற்காலிகமான ஒரு அணியை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள். இதனால் இறுதிக்கட்ட அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது".
"தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தால், நமது அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். எனவே வருண் சக்கரவர்த்தியை கொண்டு வர வேண்டும் என்றால் யாரை அணியை விட்டு நீக்குவார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்".
"சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவார் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு நேரடியாக அவரை தேர்வு செய்வது சரியான விஷயமாக இருக்காது. வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அளவு விளையாடுவது இல்லை".
"எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த தொடரில் அவர் களமிறங்கவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் தேர்வாகுவது என்பது மிகவும் கடினம். வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக தொடர் நாயகன் விருதை வாங்கி இருக்கிறார். அதற்காக நான் அவருக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றேன். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் தற்போது சக்கரவர்த்தியாக அவர் விளங்குகிறார். அவர் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.