அஸ்வின் உண்டா, இல்லையா.. பூடகமாகப் பேசுகிறாரே கோஹ்லி?
லண்டன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நாளைய முக்கியப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை கேப்டன் விராத் கோஹ்லி.
எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். இதுகுறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். அணி விவரத்தை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நாளைய முக்கியப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிதான் அரை இறுதிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி நாடு திரும்ப நேரிடும். இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி, இன்னொன்றில் வெற்றியுடன் உள்ளது.
இந்த இரு போட்டிகளிலும் அஸ்வின் இடம் பெறவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் நாளைய போட்டியில் நிச்சயம் அஸ்வின் இடம் பெறுவார் என்று அனைவரும் நம்புகின்றனர்.

இருக்கலாம்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோஹ்லி, கண்டிப்பாக எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். அணி விவரம் குறித்து முழுமையாக சொல்ல இயலாது. அதேசமயம், எல்லாவற்றுக்கும் வாய்ப்புண்டு என்றார் கோஹ்லி.

கடந்த போட்டியின் தவறுகள்
கடந்த போட்டியின் முடிவு, அதில் நாம் செய்த தவறு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளோம். நிச்சயம் மாற்றம் இருக்கும். அதுகுறித்து பேசியுள்ளோம், பேசியும் வருகிறோம்.

எதையும் எதிர்பார்க்கலாம்
எல்லாவற்றுக்கும் வாய்ப்புண்டு என்பது மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை. எதிர்பார்க்கலாம் என்றார் கோஹ்லி. ஆனால் அஸ்வின் உண்டு என்பதை அவர் உறுதியாக சொல்லவில்லை.

மழை வந்தால்
ஒரு நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் கைவிடப்பட்டால், இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்க வழி பிறக்கும். இருப்பினும் மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து அது அமையும் என்பதால் இந்தியா நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்பதுதான் முக்கியமானது.


Click it and Unblock the Notifications