தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பவுலர்கள் வீசிய 23 மெய்டன் ஓவர்கள்! அசரடிக்கும் புள்ளி விவரம்
லண்டன்: இந்திய அணியின் பந்து வீச்சு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பட்டையை கிளப்பியது. வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணம் என்று கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 321 ரன்கள் குவித்தபோதிலும், தோல்வியை சந்திக்க அதன் பந்து வீச்சே காரணம். இந்த நிலையில்தான் வென்றேயாக வேண்டிய போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டனர்.
இதற்கு ஒரு உதாரணம், நேற்று இந்திய பவுலர்கள் வீசிய 'டாட் பால்' எண்ணிக்கைதான். இந்திய பவுலர்களின் பதிலடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.

இன்ப அதிர்ச்சி
பந்து வீச்சாளர்களை நம்ப முடியாது என்பதற்காகவே டாசில் வென்ற கோஹ்லி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கைக்கு எதிராக முதலில் பேட் செய்துவிட்டு எதிரணியை கட்டுப்படுத்த திணறியதால் கோஹ்லி இந்த முடிவை எடுத்தார். ஆனால் கேப்டனுக்கு இன்ப அதிர்ச்சியை பரிசாக கொடுத்தனர் பவுலர்கள்.

சீட்டுக்கட்டான தென் ஆப்ரிக்கா
29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா, அதன்பிறகு 51 ரன்களை கூடுதலாக சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து, 191 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 44.3 ஓவர்கள்தான் தென் ஆப்பிரிக்காவால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

23.3 ஓவர்கள்
இந்திய பவுலர்கள் மொத்தம் 141 டாட் பந்துகளை வீசியுள்ளனர். அதாவது, அத்தனை பந்துகளில் சிங்கிள் ரன் கூட தென் ஆப்பிரிக்காவால் எடுக்க முடியவில்லை. இந்த பந்துகள் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் அது 23.3 மெய்டன் ஓவர்களுக்கு சமம்.

பும்ராவுக்கு முதலிடம்
இதில் 32 டாட் பால்கள் வீசி இளம் பவுலர் பும்ரா முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா 29 டாட்பால்களை வீசியுள்ளார். ஜடேஜா ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் அசத்தியுள்ளார். 10 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

எந்த பவுலர்கள் எத்தனை
புவனேஸ்வர்குமார் 28 டாட்பால்களையும், பும்ரா 32, அஸ்வின் 27, ஹர்திக் பாண்ட்யா 29, ஜடேஜா 25 டாட்பால்களையும் வீசி அசத்தியிருந்தனர். அதிகபட்சமாக பும்ராவும், குமாரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications