பிரிமிங்காம்: பிரிமிங்காமில் நடைபெற்ற இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பைனல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.
இன்றைய அரையிறுதியில் ரோகித் ஷர்மா சதமும், கோஹ்லி அரை சதமும் விளாசி அசத்தினர்.
டாசில் வென்ற இந்தியா வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. 41வது ஓவரிலேயே இந்த இலக்கை எட்டியது இந்தியா.
இந்திய அணியில் ரோகித் ஷர்மா 123 ரன்களுடனும், கோஹ்லி 96 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 78 பந்துகளில் 13 பவுண்டரிகள் உதவியோடு கோஹ்லி இந்த ரன்களை விளாசினார். ரோகித் ஷர்மா 15 பவுண்டரிகளும், 1 சிக்சரும் விளாசினார். அவரின் 11வது சதம் இதுவாகும். கோஹ்லிக்கு இது 42வது அரை சதம். வலுவான அடித்தளம் அமைக்க உதவிய தவான், 46 ரன்கள் எடுத்து மொர்டசா பந்து வீச்சில் மொசாடெக் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
முன்னதாக, இரு அணிகளும் மாற்றமேயின்றி களமிறங்கின. புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் வங்கதேசம் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் சவுமியா சர்க்கார் பௌல்ட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து டக்அவுட்டானார்.
7வது ஓவரின்போது புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் பாயிண்ட் பகுதியில் நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்த சபிர் ரஹ்மான் 19 ரன்களில் வெளியேறினார். அப்போது அந்த அணி 31 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய கை ஓங்கியது.
ஆனால், இதன்பிறகு வங்கதேச விக்கெட்டுகள் விழவில்லை. 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு வங்கதேசம் 142 ரன்கள் எடுத்திருந்தது. தமிம் இக்பால் 66 ரன்களுடனும், முஸ்பிகுர் ரஹிம் 46 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்திய வீரர்கள் எவ்வளவோ முயன்றும், வங்கதேசத்தின் 3வது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
இதையடுத்து பார்ட்டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவை களமிறக்கினார் கோஹ்லி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. மிகவும் மெல்ல வீசப்பட்ட அவரது பந்துகளை அடித்து ஆடுவதில் பேட்ஸ்மேன்கள் திணறினர். 70 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த தமிம் இக்பால் ஜாதவ் பந்தில் பௌல்ட் ஆனார். வங்கதேசம் 154 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டை இழந்தது.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்திருந்தபோது 4வது விக்கெட்டையும், 179 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும் இழந்தது அந்த அணி. முறையே ஷகிப் அல்ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹிம் அவுட்டாகினர். இதன்பிறகு இந்திய அணி பவுலர்கள் கை சிறிது நேரம் ஓங்கியிருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் வங்கதேசம் ஓரளவு அதிரடியாக ஆடியது.
இதனால் வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மர்டசே மொர்டசா 30 ரன்களுடனும், டஸ்கின் அகமது 11 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் பும்ரா, புவனேஸ்வர்குமார், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.