பென் ஸ்டோக்ஸ் ஓய்வு
இதனிடையே 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் என்னால் 100% பங்களிப்பு செய்ய முடியவில்லை. யார் இங்கிலாந்தின் உடைகளை அணிந்தாலும் அதை விரயம் செய்ய முடியாது. ஆகவே ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தேன்.
3 வடிவங்கள்
3 வடிவங்கள் என்பது என்னால் இப்போது இயலாத ஒன்று. ஷெட்யூல் மிகவும் டைட்டாக இருப்பதால் என் உடல் அதற்கேற்ப தயாராக இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்பும் வருவதில்லை. மேலும் இன்னொருவரின் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், இன்னொரு வீரர் என்னை விட பட்லருக்கு நல்ல பங்களிப்பு செய்ய முடியும் என்று கருதுகிறேன். இந்த முடிவை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பங்களிப்பையும் செய்வேன். டி20 கிரிக்கெட்டில் முழு மூச்சாக இறங்குவேன் என்று தெரிவித்தார்.
மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்
பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி வந்துள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை நெருங்கும் போது என் முடிவில் மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் உலகக்கோப்பையில் விளையாடுவது அலாதியான அனுபவம்.
இயந்திரங்கள் அல்ல
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் பற்றியோ, உலகக்கோப்பை பற்றியோ எந்த சிந்தனையும் இப்போது இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் எனது கவனம் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் கார் போல் இயந்திரங்கள் அல்ல. பெட்ரோலை நிரப்பியதும் ஸ்டார்ட் ஆவதற்கு. அதேபோல் எனது இடத்தில் இப்போது ஒரு வீரர் விளையாடி வருகிறார். திடீரென நான் மீண்டும் வருகிறேன் என்றால் அவருக்கு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.