ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஸ்கோர்
இந்திய அணியைப் பொறுத்தவரை முதலில் பவுலிங், பிறகு பீல்டிங், அடுத்து சேஸிங் என எல்லாவற்றிலும் மிகவும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியாவை மிகப் பெரிய ஸ்கோரை எடுக்க இந்தியா வழி விட்டு விட்டது. குறிப்பாக தொடக்க வீராங்கனைகள் அலிஸா மற்றும் பெத் மூனி ஆகியோர் அருமையாக ஆடி ரன் குவிப்பில் இறங்கினர். அவர்களை இந்தியா தடுக்கத் தவறி விட்டது.
பௌலர் ஷிகா பாண்டே வருத்தம்
இதுதான் தாங்கள் செய்த பெரிய தவறு என்று இந்திய பந்து வீச்சாளர் ஷிகா பாண்டேவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அலிஸா மற்றும் பெத் மூனி ஆகியோர் சொற்ப ரன்களில் இருந்தபோது சில முறை ஆட்டமிழக்கும் அபாயம் இருந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டு விட்டோம் என்று பௌலர் ஷிகா பாண்டே கூறியுள்ளார்.
10 பந்துகளில் அலிஸா விளாசல்
அதேபோல அவர்கள் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டபோது அதைத் தடுக்கவும் நாங்கள் தவறி விட்டோம். இதுதான் இந்திய அணிக்கு பெரிய பாதகமாக போய் விட்டது. நான் இப்போட்டியில் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டேன். அதில் 10 பந்துகளில் 27 ரன்களை அலிஸா விளாசியதை மோசமாக உணர்கிறேன். இருவருமே சிறப்பாக பேட் செய்தனர். அதை மறுக்க முடியாது என்று பாண்டே வருத்தம் தெரிவித்தார்.
ஷிகா பாராட்டு
அலிஸா நேற்று ஆடிய விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இப்படிப்பட்டவருக்கு எதிராக என்னதான் திட்டமிட்டாலும் அது ஒர்க் அவுட் ஆகாது. சில ஷாட்களை அவர் மிகச் சிறப்பாக ஆடினார். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பாராட்டியாக வேண்டும். அவர்கள் அருமையாக ஆடினார்கள். நாங்கள்தான் தவறி விட்டோம் என்றும் ஷிகா பாண்டே கூறினார்.
ஷிகா பாண்டே ஏமாற்றம்
எனக்கு பந்து வீசியபோது நடுக்கம் வரவில்லை. ஆனால் ரன் குவிப்பை தடுக்க முடியலேயன்னு வருத்தமாக ஏமாற்றமாக இருந்தது. இன்னும் சிறப்பாக நாங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் சிறப்பான முறையில் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கை நாங்கள் செய்திருக்க வேண்டும். அது ஏமாற்றம்தான் என்றும் ஷிபா பாண்டே தெரிவித்தார்.
பில்லி ஜீன் கிங்குடன் சந்திப்பு
இறுதிப் போட்டியில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். நான் மதிக்கும் மிகப் பெரிய விளையாட்டு ஜாம்பவான் பில்லி ஜீன் கிங்கை இங்கு நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை மறக்க மாட்டேன். அதை கவுரமாக உணர்கிறேன். பெண்கள் விளையாட்டில் சாதனை திலகமாக விளங்கியவர் பில்லி ஜீன் கிங். அப்படிப்பட்டவரை சந்தித்துப் பேசியதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார் ஷிகா பாண்டே.