
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்
இந்திய அணிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஒருமாதமாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வந்தது. ஒருநாள் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வென்றதை அடுத்து இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பெற்றது. மேலும் டி-20 போட்டியிலும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இந்திய அணி வரும் அக்டோபர் 22ல் இருந்து மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரை நியூசிலாந்துக்கு எதிராக ஆட இருக்கிறது.

இந்திய பேட்டிங்கில் மாற்றம்
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்ற போட்டியில் இடம்பெற்றும் விளையாடாமல் இருந்த ஷிகர் தவான் இந்தப் போட்டியில் விளையாடுவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் கே.எல்.ராகுலுக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அணியில் எந்த இடத்தில் விளையாடுவார் என்று இது வரை முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே அணியில் நன்றாக விளையாடும் ஹைர்திக் பாண்டியா எங்கு விளையாடுவார் என்றும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்திய பவுலிங்கில் மாற்றம்
பேட்டிங் போலவே பவுலிங்கிலும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆஸ்திரேலிய தொடரில் ஒரே ஒரு போட்டியில் களம் இறக்கப்பட்ட உமேஷ் யாதவ் அந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து அவர் இந்தத் தொடரில் இருந்து கழட்டி விடப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக புதிய பிளேயரான ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்ல வேகப்பந்து வீச்சாளரான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் முன்னணி வீரர்கள்
இந்த நிலையில் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. முக்கிய ஸ்பின் பவுலரான அஸ்வின் இந்த முறையும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ராஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாலும், ஏற்கனவே அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளதாலும் டோணி ஏதாவது ஒரு போட்டியில் ஓய்வில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











