மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரேக் சேப்பல் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா முடிவை கிரிக்கெட் வாரியத்திற்கு இமெயில் மூலம் அவர் அனுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த சேப்பல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார்.
மூத்த வீரர்கள் மாபியா கும்பலைப் போல செயல்படுகின்றனர். இளம் வீரர்களை மிரட்டி வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் விளையாடவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
சேப்பலின் புகாருக்கு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடும் வருத்தம் தெரிவித்தார். வீரர்களுடன் சேப்பல் பேசக் கூட இல்லை. அப்படிப்பட்டவர் எப்படி எங்களைக் குறை கூறலாம் என்று அவர் பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சேப்பல் இன்று திடீரென தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை இ மெயில் மூலம் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு அவர் அனுப்பியுள்ளார். தனது குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது ராஜினாமா கடிதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்த காலம் மிகவும் சவாலானது. அதை தொழில்ரீதியாக சமாளிக்க நினைத்தேன்.
இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல வெற்றிகளைப் பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினாலும், இந்தியாவுடனான எனது தொடர்பு தொடரும் என்று கூறியுள்ளார் சேப்பல்.
நியூசிலாந்தின் ஜான் ரைட்டுக்குப் பின்னர், 2005ம் ஆண்டு மே மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராக, சேப்பல் பதவியேற்றார். 22 மாதங்கள் அப்பதவியை அவர் வகித்தார். அவரது பதவிக்காலம் உலகக் கோப்பை வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
சேப்பல் பதவி விலகியுள்ளது குறித்து தங்களுக்கு இதுவரை தகவல் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இருப்பினும் 6ம் தேதி மும்பையில் நடைபெறும் வாரியக் கூட்டத்துக்கு சேப்பல் வருவார் என்று வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.