
காலவரையின்றி ஒத்திவைப்பு
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரை இந்த ஆண்டே கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆயினும் டி20 உலக கோப்பை குறித்த ஐசிசியின் முடிவுக்காக காத்திருக்கிறது.

பிசிசிஐ திட்டம்
இந்த தொடர் வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி நவம்பர் மாதத்தின் மத்தியில் வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென ஐபிஎல் அணிகளை தயாராக இருக்கவும் பிசிசிஐ சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், யூஏஇயில் இந்த தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அணிகள் மும்முரம்
ஐபிஎல் குறித்த திட்டவட்டமான எந்த முடிவையும் பிசிசிஐ அறிவிக்காத நிலையிலும், ஐபிஎல் அணிகள் யூஏஇயில் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு சார்டர்ட் விமானங்களை வாடகைக்கு எடுக்கவும் அபு தாபியில் ஹோட்டல்களை புக் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

ஆகஸ்ட் இறுதியில் பயணம்
மேலும் யூஏஇ செல்வதற்கு முன்னதாக வீரர்களை இந்தியாவிலேயே தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் நேரிடையாக அங்கு வரும்வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் அணிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியிலேயே யூஏஇ பயணத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் இந்தியாவில் விமானங்கள் செயல்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

தெறிக்கவிட்ட மீம்ஸ்
யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எவ்வாறாகிலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என பிசிசிஐயும், பார்த்துவிட வேண்டும் என ரசிகர்களும் போட்டியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











