சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சென்னையில் பலப்பரிட்சை நடத்தி வருகிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பாகிஸ்தான் அணி விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட மனக்கசப்பை போக்கும் வகையில் சென்னையில் பாகிஸ்தான் அணிக்கு பெரும்பான்மையான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை மைதானத்தில் அளித்தார்கள். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் சிலர் நமது நாட்டின் தேசிய கொடியை எடுத்து வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கு ஏன் இந்திய கொடியை எடுத்துச் செல்கிறீர்கள் என்று கூறி அந்தக் கொடியை வாங்க முயற்சி செய்திருக்கிறார்.
இது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய கொடியை வாங்க முயற்சித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்திய கொடியை மைதானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறிய போலீசார் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
சம்பந்தப்பட்ட போலீசார் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்கள் மீது வடநாட்டு ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எப்படி நீங்கள் ஆதரவு அளிக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பதின் எடுத்துக்காட்டாகவே இவ்வாறு செய்திருப்பதாக தமிழக ரசிகர்கள் அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.