சென்னை: இன்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியைக் காணும் ஆர்வம் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களிடையே நிலவியதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
உலகக் கோப்பைப் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்துக்கு நிலவியதைப் போன்ற எதிர்ப்பார்ப்பும் ஆர்வமும், இறுதிப் போட்டிக்குக் கூட இருக்குமா தெரியவில்லை.

அந்த அளவு மக்கள் ஆர்வத்துடன் இந்த ஆட்டம் பற்றியே பேசினர், சமூக வலைத்தளங்களில் எழுதினர்.
இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இன்று வேலைக்கு விடுமுறைக் கடிதம் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்தவர்கள் எண்ணிக்கை பல லட்சம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இயல்பாகவே கிரிக்கெட் என்றால் மகா ஆர்வம் காட்டும் சென்னைவாசிகளும் இதில் விலக்கில்லை. பலர் இன்று மேட்ச் பார்க்கணும், வேலைக்கு வரமுடியாது என வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களாம்.
காலையில் ஆட்டம் தொடங்கியதிலிருந்து, சாலைகள் வெறிச்சோட ஆரம்பித்துவிட்டன. நண்பர்கள் பலர் குழுக்களாக இணைந்து இன்றைய ஆட்டத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.
கடைகள், ஹோட்டல்களில் சுத்தமாக கூட்டமில்லை இன்று. அதைவிட, அந்த கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும்கூட இன்று இந்தியா - ஆஸி ஆட்டத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னை மட்டுமல்ல, இந்தியாவின் பிற நகரங்களிலும் கூட கிட்டத்தட்ட இதே நிலைதான்.
இப்படி மொத்த பேரையும் டிவி பெட்டிகளின் முன்பாக தவம் கிடக்க வைத்த இந்தியா, இன்று வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இறுதிவரை ஆட்டத்தில் ஏதேனும் திருப்பம் ஏற்படாதா என்ற தவிப்போடு பல கோடி இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர்.
டோனியின் விக்கெட் வீழ்ந்ததுமே, 'அவ்ளோதான்.. ஆட்டம் முடிஞ்சது' என மனதை லகுவாக்கிக் கொண்டனர் பலர். இன்னும் சிலரால் இந்த தோல்வியைத் தாங்கவே முடியவில்லை.