
சென்னை கிரிக்கெட் ரசிகர்
பிரபலமும் அருளும் நிறைந்த இந்த கிரிக்கெட் விநாயகரை அமைத்த கே.ஆர்.ராமகிருஷ்ணன் (67). அண்ணா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு அவர்களது குடியிருப்பு முன்பு விநாயகர் கோயில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்தியா- ஆஸி. டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

கிரிக்கெட் விநாயகர்
நேரலையில் ஆட்டத்தைப் பார்த்த ராமகிருஷ்ணன், ‘போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், கிரிக்கெட் விநாயகர் என்றே பெயர் வைத்துவிடுகிறேன்' என்று பிரார்த்திக்கிறார். இந்திய அணி வெற்றி பெற, ‘கிரிக்கெட் விநாயகர்' என்றே பெயர் சூட்டப்படுகிறது.

பேட்டிங், பவுலிங்
கிரிக்கெட் விளையாடுவது போன்றே விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த விநாயகரின் ஸ்பெஷல். மொத்தம் 6 விநாயகர் சிலைகள். நடுநாயகமாக இருக்கும் விநாயகர், இந்திய அணியின் 11 வீரர்களையும் குறிக்கும் விதமாக 11 தலைகள், ஒரு கையில் பேட், இன்னொரு கையில் பந்து, கால்களில் பாதுகாப்பு கவசம் என காட்சி தருகிறார். மற்றவர்கள் வலதுகை பேட்ஸ்மேன், இடதுகை பேட்ஸ்மேன், பவுலிங், கீப்பிங், ஃபீல்டிங் விநாயகர்கள். இவை மாமல்லபுரத்தில் பிரத்தியேகமாகச் செய்யச் சொல்லி பிரதிருஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிக்ஸர் அடிப்பவனே போற்றி
பெயர், உருவம் மட்டுமல்லாது, இவருக்கான வழிபாடும் வித்தியாசம். ‘ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி, சிக்ஸர் அடிப்போனே போற்றி' என்று தமிழில் 108 மந்திரங்களையும், ‘ஓம் விக்கெட் கீப்பராய நமஹ, ஓம் ஹேட்ரிக் லேனேவாலே நமஹ, ஓம் ஆல்ரவுண்டராய நமஹ' என்று இந்தியில் 108 மந்திரங்களையும் தயாரித்து வைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.

மந்திர அர்ச்சனை
தினந்தோறும் இந்த மந்திரங்களுடன் அர்ச்சனையும் நிவேதனம், தீபாராதனையும் கிரிக்கெட் விநாயகருக்கு உண்டு. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்றால் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடத்துகிறார்.

அதிகரித்த மவுசு
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடந்து வருவதால் கிரிக்கெட் விநாயகருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது, இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன.

போட்டியில் வெற்றி
இந்தியா-பாகிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தின் போது, ஏராளமான ரசிகர்கள் கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால்தான் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது என்பது அண்ணாநகர் பகுதி கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
அதுபோல் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன் காரணமாகத்தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக தென்ஆப்ரிக்க அணியை, இந்திய அணி அதிரடியாக வீழ்த்தியதாக கிரிக்கெட் விநாயகரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் அர்ச்சனை
இதுபற்றி கோவில் நிர்வாகியும் கிரிக்கெட் ரசிகருமான ராமகிருஷ்ணன், ‘‘13 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விநாயகரை வழிபடுகிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் முன்பாக, கடந்த 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கோயிலில் கிரிக்கெட் கணபதி ஹோமம் நடத்தினேன். நம் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்களை தேங்காயில் தனித்தனியே எழுதி வைத்துள்ளேன். இந்தியா ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்றதும், இவை சிதறுகாயாக உடைக்கப்படுகிறது என்கிறார் ராமகிருஷ்ணன்.

கோப்பை நிச்சயம்
இந்திய அணி விளையாடும் நாட்களில் இக்கோயிலில் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடைசி வரை இந்தியாவை வெற்றி பெறச் செய்து கிரிக்கெட் விநாயகர் கட்டாயம் உலகக் கோப்பையை பெற்றுத் தருவார்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராமகிருஷ்ணன்.


Click it and Unblock the Notifications











