விசாகப்பட்டினம்:எங்க ஒவ்வொரு பாலும் நாங்களே செதுக்கினதுடா என்று தல அஜித் வசனத்தை பேசி சிஎஸ்கே வெற்றியை கொண்டாடி இருக்கிறார் இம்ரான் தாஹிர்.
மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணியில் தனித்துவமான வீரர்களின் செய்கைகளே அந்த அணியினருக்கு அதிகப்படியான ரசிகர்களை பெற்று தருகிறது என்பதை மறுக்க முடியாது. பிராவோ, ரெய்னா, கேதர் ஜாதவ். ஹர்பஜன் சிங் போல மறக்க முடியாத வீரர் இம்ரான் தாஹிர்.

போட்டியின் போது விக்கெட் கிடைத்துவிட்டால் பறவை போல கைகளை அகல விரித்துக் கொண்டு களத்தில் அவர் ஓடிவருவது தனி ரகம். ரசிகர்களின் கரவொலியும், விசில் சத்தமும் அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். அதுவும்.. அவர் பந்தில் எதிரணி வீரர்கள் அடிக்கும் கேட்சுகள் தோனியின் கைகளுக்கு செல்லும் முன்பே குஷியாட்டம் போட்டுவிடுவார்.
இந்த சீசனிலேயே அதிக வயதான வீரரான அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று செல்லப் பெயர் உண்டு. அதாவது பராசக்தி படத்தில் ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்பது போல.. விக்கெட் கிடைத்து விட்டால் போதும்.. ஓடிக் கொண்டிருப்பார். அந்த ஓட்டத்துக்கு ஐபிஎல் தொடரில் எப்போதுமே ஏக மாஸ்.
இந்த பராசக்தி எக்ஸ்பிரஸ், தமிழ் புலவர் ஹர்பஜன் போல டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறது. அதாவது... தமிழ் தெரியாத காரணத்தால் தமிழை ஆங்கிலமாக மாற்றி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இம்ரான் தாஹிர். ஆங்கிலத்தில் தமிழ் வசனங்கள். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்களோட ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும் ஏன் ஒவ்வொரு பாலுமே நாங்களா செதுக்கினதுடா.. எடுடா வண்டிய போடுடா விசில் என்று கூறியுள்ளார்.