லண்டன்: இங்கிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் அவர் தனது 42 வது வயதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தனது பெயரை அளித்து இருக்கிறார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரது பெயரும் இடம் பெற உள்ளது.
இந்த நிலையில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேசி இருக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். அவர் மீது எந்த ஐபிஎல் அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவர் முழு நேர டெஸ்ட் வேகப் பந்துவீச்சாளராகவே அறியப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் முத்திரை பதித்த அவர் சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். அவர் அதிக டி20 போட்டிகளில் ஆடவில்லை. தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் கேரியரிலும் இதுவரை சர்வதேச போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 44 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதில் 41 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
சர்வதேச அளவில் 19 டி20 போட்டிகளில் 18 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி இருக்கிறார். இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் பேசுகையில், ஜேம்ஸ் ஆண்டர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.
"சிஎஸ்கே அணி முதல் சில ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்களை எப்போதும் பயன்படுத்தும். ஷர்துல் தாக்குர் அந்த அணியில் ஸ்விங் வீசும் பவுலராக இருக்கிறார். அவர் தற்போது அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் ஜிம்மி ஆண்டர்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை." என்றார்.
முன்னதாக ஏபி டிவில்லியர்ஸ் ஜேம்ஸ் ஆண்டர்சன் பற்றி பேசுகையில், தோனியின் பாதையை பின்பற்றி அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என்றார். தோனி தனது 43 வது வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அதே போல 42 வயதான ஆண்டர்சனும் ஐபிஎல் தொடரில் விளையாட முயல்வதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
ஏதேனும் ஒரு அணியில் இடம் பெற்று விட வேண்டும் என்பதால் தனது சம்பளத்தையும் 1.25 கோடி என்பதாக அவர் குறைத்து வைத்துள்ளார். இதுதான் அவரது அடிப்படை விலை. நிச்சயமாக ஏதேனும் ஒரு அணி இந்த அடிப்படை விலைக்கு அவரை வாங்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்காவிட்டாலும், அவரது அனுபவம் அவரை வாங்கும் ஐபிஎல் அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு உதவும் எனவும் ஏபி டிவில்லியர்ஸ் சுட்டிக்காட்டி இருந்தார்.