ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அரை இறுதியில் நுழையக் காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
5-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதுகின்றன.
சென்னை அணி தனது முதல் 2 போட்டிகளில் டைட்டன்ஸ், ஹைதராபாத் அணிகளை வென்று 8 புள்ளிகளுடன் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும்.
சென்னை அணியில் பேட்டிங் பலமாக உள்ளது. ரெய்னா, டோனி அதிரடியாக விளையாடி வருகிறார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி விஸ்வரூபம் எடுத்தார்.
சென்னை அணி பீல்டிங்கில் முன்னேற்றம் அடைவது அவசியம். ஜேம்ஸ் ஹோம்ஸ் தலைமையிலான பிரிஸ்பேன் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.