சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஓரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கேவின் வின் கடைசி ஓவர்களில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ், தொடை தசைப்பிடிப்பு காயத்தால் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்போர்ட்ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் பேசினார். "இது எங்களுக்கு ஒரு பெரிய அடி. குறிப்பாக கடைசி ஓவர்களில் எலிஸ் ஒரு முக்கியமான பந்துவீச்சாளர். மாற்று வீரர்களைத் தேடி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

எலிஸ் இல்லாதது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியின் திட்டங்களில் பெரிய மாற்றத்தை கொண்டுவரக்கூடும். 2022 முதல், அணி மதீஷா பதிரனாவை கடைசி ஓவர் நிபுணராக நம்பியிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஏமாற்றமளிக்கும் செயல்திறனுக்குப் பிறகு, இலங்கை வேகப்பந்து வீச்சாளரை சிஎஸ்கே விடுவித்தது, இதனால் எல்லிஸ் மிக முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அணியின் வெளிநாட்டு வீரர்கள் குறித்த தகவலையும் விஸ்வநாதன் அளித்தார். வெளிநாட்டு வீரர்கள் அடுத்த சில நாட்களில் முகாமில் இணைவார்கள் என்றும், சமீபத்திய மேற்கு ஆசிய நெருக்கடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் உள்ள முக்கிய விமான நிலையங்களைப் பாதித்தாலும், இது வெளிநாட்டு வீரர்களின் பயணத் திட்டங்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன், இன்று சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். இந்திய டி20 உலகக் கோப்பை வெற்றியின் முக்கிய காரணமாக அவர் இருந்தார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, கடந்த ஆண்டு ஐ.பி.எல்-லில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சாம்சனைத் தங்கள் அணியில் சேர்த்தது.

மேலும், நூர் அகமது ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், ஜேமி ஓவர்டன் இன்று இரவு சென்னை வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெவால்ட் ப்ரெவிஸ், மேட் ஹென்றி, சாக் ஃபவுல்ஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் மார்ச் 22 க்குள் இணைவார்கள், அக்கில் ஹோசைன் 25 ஆம் தேதி இணைவார். எம்.எஸ். தோனி உள்ளிட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மார்ச் 1 முதல் நகரத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.