சென்னை: ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி என்றால் நிச்சயமாக அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றது மட்டுமின்றி, அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்ற அணி என்ற பெருமையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
வேறு எந்த அணிக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களும் சிஎஸ்கே அணிக்கு உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 முதல் 2024 வரை ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்பட்டுள்ளது, எந்த சுற்று வரை முன்னேறியது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆண்டிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அந்தத் தொடரில் 16 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றது. முதல் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லவில்லை.
அடுத்து 2009 ஆம் ஆண்டு 15 போட்டிகளில் எட்டு வெற்றிகளைப் பெற்றது. முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்தது.
2010 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றது. அந்த முறை புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
அடுத்து 2011 ஆம் ஆண்டு தான் ஆடிய 16 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் சுற்றில் 10 அணிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன் மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது.
அடுத்து 2012 ஆம் ஆண்டு 19 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றது. முதல் சுற்றில் மொத்தம் ஒன்பது அணிகளில் நான்காவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்தது.
மீண்டும் 2013 இல் 18 போட்டிகளில் 12 வெற்றிகளைப் பெற்று முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டி வரை முன்னேறி அதில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
2014 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி தோல்வி அடைந்தது.
அடுத்து 2015 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் பத்து வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்தது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்றது. அந்த முறை 16 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்று முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியிலும் வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
2019 ஆம் ஆண்டு 17 லீக் சுற்றுப் போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆனால் இறுதிப் போட்டி வரையும் முன்னேறி அதில் தோல்வி அடைந்தது.
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மோசமாக அமைந்தது. அப்போது 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் சுற்றில் எட்டு அணிகளில் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்தது. லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.
அடுத்து 2021 ஆம் ஆண்டு லீக் சுற்றில் 16 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த ஆண்டு நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்தைப் பரிசோதனை செய்து பார்த்தது. கேப்டனாக இருந்த தோனி முதல் பாதி தொடரில் தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு அளித்தார். ஆனால், அந்த முறை சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.
லீக் சுற்றில் 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 10 அணிகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே அணி. அந்தத் தொடரின் பாதியிலேயே தோனி மீண்டும் கேப்டன் பதவியை தொடர்ந்தார்.
அதன் பின் 2023 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று லீக் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அதுவே தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய கடைசி ஆண்டாக அமைந்தது.
2024 ஆம் ஆண்டு தோனி தனது கேப்டன் பதவியை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்க்கு அளித்தார். இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கலவையான ஆண்டாகவே அமைந்தது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி லீக் சுற்றில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
2020, 2022 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மற்ற ஆண்டுகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. அவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை என்றாலும் அவரது ரன் சாதனையை இதுவரை வேறு எந்த சிஎஸ்கே வீரர்களும் முந்த முடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா 200 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 5529 ரன்களைக் குவித்திருக்கிறார். அவரது சராசரி 33.1 ஆகும். இரண்டு சதங்கள் மற்றும் 38 அரை சதங்களை அடித்துள்ளார்.
அதேபோல சிஎஸ்கே அணிக்காக பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் டிவைன் பிராவோ. அவர் 130 போட்டிகளில் 154 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 22.66, எக்கானமி 8.32 என்பதாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகவும் மறக்க முடியாத வெற்றி எது?