ஐபிஎல்- முரளி விஜய் அபார சதம் – சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை தொடங்கிய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்த்து.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய மாத்யூ ஹெய்டனும், முரளி விஜய்யும் விளாசித் தள்ளினர். குறிப்பாக முரளியின் பேட்டிங்கில் பொறி பறந்தது.
பிரமிப்பூட்டும் வகையில் ஆடிய முரளி விஜய், ராஜஸ்தான் பவுலிங்கைத் தவிடுபொடியாக்கினார். ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை அடித்து நொறுக்கிய முரளி 127 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.
வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும விரட்டிய முரளி விஜய் வெறும் 56 பந்துகளில் 127 ரன்களைக் குவித்து அதிரடியாக ஆடி முடித்தார். முரளி விஜய் இன்றைய ஆட்டத்தில் 11 சிக்சர்களை வீசி ராஜஸ்தான் பந்து வீச்சை பதம் பார்த்து விட்டார். பவுண்டரிகளின் பங்கு 8 ஆகும்.
அதேபோல அல்பி மார்க்கல் 34 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார். மாத்யூ ஹெய்டனின் பங்கு 34 ரன்களாகும்.
கேப்டன் டோணி கடைசி ஓவரில் ஆட வந்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் 246 ரன்களைக் குவித்து புதிய ஐபிஎல் சாதனையைப் படைத்தது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளிலேயே இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை எட்டி சென்னை அணி தனது சொந்த மண்ணில் சாதனை படைத்தது.
முதல் சுற்றுப் போட்டியில் ஐந்து தோல்விகளைச் சந்தித்தது சென்னை. அதில் நான்கு தொடர் தோல்விகளாகும். மூன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்த்து.
கடந்த புதன்கிழமையன்று சென்னையில் நடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி தனது அரை இறுதிக் கனவை தக்க வைத்துக் கொண்டது.
இனிமேல் வரும் அத்தனை போட்டிகளிலும் சென்னை வென்றாக வேண்டிய இக்கட்டான நிலை. எனவே ஒவ்வொரு போட்டியும் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக மாறியுள்ளது.
இந்த நிலையில், முரளி விஜய்யின் அபார ஆட்டத்தால் சென்னை அணி மாபெரும் சாதனையைப் படைத்து ரன்களைக் குவித்து ராஜஸ்தானுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications