சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக 17 வயதான ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். முதலில் பிரித்வி ஷாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், 17 வயதான மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேயை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அவரை சில வாரங்களுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடன் பயிற்சி செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முதல் 5 போட்டிகளில் செயல்பட்டார். இரண்டு அரை சதங்களையும் அடித்திருந்தார். ஆனால், அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதில் முறிவு ஏற்பட்டிருப்பதால் தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் 2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட்க்கு மாற்று வீரராக யாரும் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்வி இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக தற்போது ரச்சின் ரவீந்திர மற்றும் டேвоன் கான்வே களம் இறங்கி வருகின்றனர். அவர்கள் இருவரில் ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் சரியாக விளையாடாமல் ஏமாற்றம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ருதுராஜ் கெய்க்வாட்க்கு மாற்று துவக்க வீரராக 17 வயதான ஆயுஷ் மாத்ரேவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது.
ஆயுஷ் மாத்ரே எப்போது இணைவார் என்பது குறித்து விசாரித்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டி நடைபெறும் லக்னோவுக்கு அவர் செல்வது கடினம் என தெரியவந்துள்ளது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியின்போது மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியுடன் இணைவார் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 20 அன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.