சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சார்பாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. பவர் பிளே ஓவர்களில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி ஆடும் முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்வது ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதால், ஆயுஷ் படோனிக்கு பதில் கே கெளதம் அணியில் இடம்பெற்றுள்ளார். சிஎஸ்கே சார்பாக மீண்டும் அதே அணி களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக கான்வே - ருதுராஜ் இணை களமிறங்கியது. இதனால் லக்னோ அணி சார்பாக முதல் ஓவரை மார்க் வுட் வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர் கைல் மேயர் பந்துவீசினார். அந்த ஓவரில் 6 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது ஓவரை ஆவேஷ் கான் வீசினர். அதில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் மீண்டும் கைல் மேயர்ஸ் வீசிய 3வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். குருணால் பாண்டியா வீசிய ஒவரில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் இன்னொரு சுழற்பந்துவீச்சாளராக கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச அழைக்கப்பட்டார். முன்னாள் சிஎஸ்கே வீரர் என்பதால் சேப்பாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஓவருக்காக காத்திருந்தது போல், மூன்று சிக்சர்களை விளாசி தள்ளினார்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணியால் மறைத்து வைக்கப்பட்ட மார்க் வுட் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்த ஓவரிலும் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்கப்பட லக்னோ அணி என்ன செய்வதென புரியாமல் திணறியது. தொடக்க வீரரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பவர் பிளே ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.