
சொதப்பிய பஞ்சாப் அணி
நேற்றைய ஐபிஎல்லின் 53வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் இந்த போட்டியில் பஞ்சாப் அணி சொதப்பியதை அடுத்து தோல்வியை எளிதாக அந்த அணி பெற்றுள்ளது.

சிஎஸ்கே 12 புள்ளிகள்
பிளே ஆப் சுற்றிலிருந்து கடந்த இரு போட்டிகளுக்கு முன்பே சிஎஸ்கே வெளியேறியுள்ள நிலையில், தொடர்ந்த 3 வெற்றிகளின் மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் கௌரவமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதன்மூலம் பிளே-ஆப் சுற்றிற்கு செல்ல முடியாவிட்டாலும், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடரிலிருந்து வெளியேறிய பஞ்சாப்
ஆனால் இந்த போட்டியின் தோல்வி மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்து அந்த அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த அந்த அணி, பின்பு சுதாரித்துக் கொண்டு, தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றது.

வீணான ஹுடாவின் முயற்சி
ரன் ரேட்டிலும் பஞ்சாப் அணி சிறப்பான புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியின் தோல்வி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது. 12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அணியின் தீபக் ஹுடா 32 பந்துகளில் 60 ரன்களை குவித்த போதிலும் அந்த முயற்சி வீணானது.

ருதுராஜின் சாதனை
போட்டியில் சிஎஸ்கேவின் ருதுராஜ் தொடர்ந்து 3வது போட்டியில் அரைசதம் எடுத்ததும், பாப் டூ பிளசிஸ் அடித்த 48 ரன்களும் அணியின் வெற்றியை உறுதி செய்தன. இதேபோல நிகிடியின் பந்துவீச்சும் அணிக்கு கைகொடுத்தது. இந்த அபார வெற்றியுடன் அந்த அணி இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


Click it and Unblock the Notifications