109 ரன்கள் தான்
109 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் கண்டது. எளிதான இலக்கு என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அடித்து, ஆடி போட்டியை முடித்துவிடும் என்று ரசிகர்கள் நம்பினர்.
வாட்சன் 17 ரன்கள்
ஆனால்... அது வேறாக தான் இருந்தது. கொஞ்சம் கூட பரபரப்பின்றி ஆமை வேகத்தில் ரன்களை சேர்க்க தொடங்கியது. அடித்து ஆட முற்பட்ட வாட்சன் 17 ரன்களில் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு டு பிளெசிஸ் உடன் சின்ன தல ரெய்னா கை கோர்த்தார்.
சூப்பர் கேட்ச்
மின்னல் வேக ரன்கள் வரும்.. ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றினார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்களுடன் வெளியேறினார். அவர் அடித்த கேட்சை அற்புதமாக பிடித்து அவரை வெளியேற்றினார் பியூஷ் சாவ்லா.
மெதுவாக வந்த ரன்கள்
அதன் பிறகு ராயுடு வந்தார். இவரும் டு பிளெசிஸ்சும் பேசி வைத்திருப்பார்கள் போல... ரன்களை எடுப்பதற்கு அப்படி யோசித்தனர். ஆமையை விட மிக மெதுவாக ரன்களை சேர்க்க தொடங்கினர்.
ராயுடு 21 ரன்கள்
எளிதாக எடுத்து வெற்றியை மூட்டை கட்ட வேண்டிய ஆட்டத்தை ஜவ்வு கணக்காக இருவரும் இழு.. இழு... என்று இழுத்தனர். 21 ரன்களில் ராயுடுவும் வெளியேறினார். அதன்பின்னர்... டு பௌசிஸ் உடன் ஜாதவ் கை கோர்த்தார்.
4 ரன்கள் தேவை
நிலைமை ஒன்றும் மாறவில்லை. அதே ஜவ்வுதான்.. சென்னை அணிக்கு 18 பந்துகளில் 4 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனாலும் ஆட்டம் முடியவில்லை.
வொய்டு
18வது ஓவரை சுனில் நரைய்ன் வீச... முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ரன்கள் இல்லை. 3வது பந்தை மீண்டும் நரைய்ன் வீச... அந்த பந்து வொய்டாக போனது.
வெற்றி, முதலிடம்
அது கூட பரவாயில்லை... விக்கெட் கீப்பர் கையில் அகப்படாமல் நேராக பவுண்டரிக்கு போக... சென்னைக்கு கிடைத்தது 5 ரன்கள். அப்பாடா வெற்றி. ஒரு வழியாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது சென்னை அணி. புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.