சென்னை: இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 146 ரன்களை எடுத்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்நிலைியல் சென்னையில் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நேற்றைய, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரனகள் எடுத்திருந்தது.
இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக் 6 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். பட்லர் 5 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய மொயீன் அலி 146 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்வரிசை வீரர்களான ரஷித் 60 ரன்கள், பிராட் 19, பால் 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பேட் செய்த டவ்சன் 66 ரன்களை குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், உமேஷ், இஷாந்த் தலா 2 விக்கெட்டுகள், அஸ்வின், மிஸ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் இந்தியா, விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 30 ரன்களும், பார்திவ் பட்டேல் 29 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.