கோவை: திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடியது. திருப்பூர் அணி விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற திருப்பூர் அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து திருப்பூர் அணி தர்ப்பில் களமிறங்கிய துஷார் ரஹேஜா 2 ரன்களிலும், சதுர்வேத் 8 ரன்களிலும், விஷால் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திருப்பூர் அணி திணறியது. இதையடுத்து சிறப்பாக ஆட வேண்டிய பொறுப்பு விஜய் சங்கருக்கு வந்தது. அவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் சென்னை அணி வீரர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இதனால் பவுண்டரிகள் அடிப்பது கடினமாகியது. இந்த நிலையில் 33 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்து ராதாகிருஷ்ணன் ஆட்டமிழக்க, மறுபக்கம் 28 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் வெளியேறினார். இறுதியாக ராஜேந்திரன் விவேக் மட்டும் அதிரடியாக விளையாடி 26 ரன்கள் சேர்த்தார். இதனால் திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.
சென்னை சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் குமார் மற்றும் ரஹில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஜெகதீசன் - பிரதோஷ் பால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் அஜித் ராம் வீசிய சாதாரண பந்தில் ஜெகதீசன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து இளம் வீரர் பிரதோஷ் பால் 25 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
பின்னர் அனுபவ வீரர்களான பாபா அபராஜித் - சஞ்சய் யாதவ் கூட்டணி இணைந்தது. அதில் சஞ்சய் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ரன்கள் குவித்த பாபா அபராஜித் 29 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 46 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இவருக்கு ஆல்ரவுண்டர் ஹரிஷ் குமார் நிதானமாக பேட்டிங் செய்து கம்பெனி கொடுத்தார்.
இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். அதேபோல் திருப்பூர் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.