சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் கோவை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி கோவை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. துவக்க வீரர் கோபிநாத் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு கோபிநாத் உடன் இணைந்த வி.சரவணன் அதிரடியாக ஆடி 52 ரன்கள் விளாசினார். கோவை தரப்பில் விக்னேஷ், ஹரிஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 162 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அந்த அணிக்கு சூர்ய பிரகாஷ், அனிருத் சீதாராம் துவக்கம் தந்தனர். அனிருத் சீதா ராம் அதிரடியாக 15 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சூர்ய பிரகாஷ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகியதால் சேப்பாக் அணி சுதாரித்துக் கொண்டது.
கடைசி ஓவரில் கோவையின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைபட்டது. ஆனால் அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தூத்துக்குடி அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.