திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்களில் வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்து, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.
இந்த நிலையில், விபி காஞ்சி வீரன்ஸ் அணியுடன் நேற்று சேப்பாக் அணி விளையாடியது. இதில் 13 ரன்களில் சேப்பாக் வென்றது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 5 தோல்விகளுடன், சேப்பாக் மற்றும் காஞ்சி அணிகள் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இல்லை.
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. எஸ். கார்த்திக் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் கோபிநாத் 31 ரன்கள் எடுத்தார். கடைசியில் முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய காஞ்சி அணிக்கு விஷால் வைத்யா 24, எஸ். அருண் 27 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தனர். மற்றவர்கள் ஓரளவுக்கு ரன் குவித்தாலும் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பபுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சேப்பாக் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.