மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி விட்ட கிரேக் சேப்பல், நேற்று ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்றார்.உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் கிளம்பின. மூத்த வீரர்களின் போக்கை கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்தார் சேப்பல்.இதனால் கோபமடைந்த சச்சின் டெண்டுல்கரும், யுவராஜ் சிங்கும், சேப்பலைக் கண்டித்து பேட்டி கொடுத்தனர். இந்த நிலையில், சேப்பல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.வெள்ளிக்கிழைம மும்பையில் தொடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்திற்கு வந்த சேப்பல் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். பின்னர் வாரிய நிர்வாகிகளுடன் கடுமையாக வாதிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து சென்றார்.அன்று இரவே அவர் சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று காலை மும்பையில் உள்ள பாம்பே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் சேப்பல். அதன் பின்னர் அவர் உடல் நலம் சரியானது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சேப்பல் நேராக விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார்.