ராஜ்காட்: அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா அறிவித்திருக்கிறார். 37 வயதான புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 19 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும்.
புஜாராவின் சராசரி 43 என்று அளவில் இருக்கின்றது. இதே போன்ற புஜாரா ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 51 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார். இந்திய அணிக்காக 2010 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா அறிமுகமானார்.

அதேபோன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியும் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடினார். தனது ஓய்வு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ள புஜாரா, "ராஜ்கோட்டின் சிறு பையனாக பெற்றோர் உடன் இணைந்து நட்சத்திரத்தை அடைய என் இலக்கை நிர்ணயித்து இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன்."
"ஆனால் இந்த விளையாட்டு எனக்கு இவ்வளவு நல்ல விஷயங்களை கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லையற்ற வாய்ப்புகள் எல்லையற்ற அனுபவங்கள் அன்பு பாசம் என அனைத்தையும் இந்த கிரிக்கெட் வழங்கி இருக்கிறது. இதை அனைத்தும் தாண்டி என் நாட்டுக்காகவும் என் மாநிலத்திற்காகவும் விளையாடிய வாய்ப்பு கிடைத்ததை என்றும் மறக்க மாட்டேன்."
" இந்திய ஜெர்சியை அணிந்து ஒவ்வொரு முறையும் தேசிய கீதத்தை பாடும்போது, என்னுடைய சிறந்த செயல்பாட்டை நாட்டிற்காக வழங்கி இருக்கின்றேன். நான் என்ன நினைக்கின்றேன் என்பதை வார்த்தைகளால் சொல்வது மிகவும் கடினம். எல்லாரும் சொல்வது போல் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கும். எனக்கு இந்த பயணம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது."
"இதற்காக நான் என்றும் நன்றியுணர்வுடன் இருக்கின்றேன். இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்."
" எனக்கு வாய்ப்பு வழங்கிய அனைத்து அணிகளுக்கும் பிரான்ச்சைஸ் அணிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. என்னுடைய பயிற்சியாளர்கள், எனது வழிகாட்டிகள், என்னுடைய குருக்கள் அனைவருக்கும் நன்றி கடன் பட்டு இருக்கின்றேன். என் சக அணி வீரர்களுக்கும் ,பயிற்சியாளர் குழுவில் உள்ளவர்களுக்கும் வலைப்பயிற்சியில் பந்து வீசியவர்களுக்கும், நடுவர்களுக்கும் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்."
" நீங்கள் எல்லாம் கடினமாக உழைப்பதால் தான் எங்களால் இந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிகிறது. இதேபோன்று எனது ஸ்பான்ஸர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விளையாட்டு என்னை உலகத்தில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று இருக்கிறது. ரசிகர்களின் ஈடு இணையற்ற ஆதரவும், அன்பும் எப்போதுமே எனக்கு இருந்திருக்கின்றது."
" நான் எங்கு விளையாடினாலும் உங்களுடைய வாழ்த்துக்களும் ஊக்கமும் எனக்கு எப்போதுமே கிடைத்திருக்கின்றது. இதற்காக நான் எப்போதுமே நன்றி உணர்வுடன் இருப்பேன். இது எல்லாம் கிடைத்தது என்றால் எனது குடும்பத்தினர் ஈடு இணையற்ற தியாகத்தை செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. என்னுடைய தாய், தந்தை, மனைவி, குடும்பத்தினர் என அனைவருக்குமே இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி" என்று புஜாரா கூறியுள்ளார்.