டிராவிட் சாதனை சமன், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் புஜாரா
கொழும்பு: இந்திய வீரர் புஜாரா இன்று ராகுல் டிராவிட்டின் சாதனையொன்றை சமன் செய்து அசத்தியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருக்கும்போது தவான் 35 ரன்னில் அவுட்டானார். பின்னர் 2வது விக்கெட்டிற்கு ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.
112 பந்தில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்த புஜாரா, 164 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது புஜாராவிற்கு 50வது டெஸ்ட் போட்டியாகும். 50வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததுடன், டெஸ்டில் தனது 13வது சதத்தை விளாசியுள்ளார் புஜாரா.
இந்த இன்னிங்சில் 34 ரன்களை தொட்டபோது 4 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இந்த நிலையில்தான் இன்று மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனது 50வது போட்டியில் சதம், 4 ஆயிரம் ரன்கள் மற்றும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை என புஜாராவுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி.
டிராவிட் போல புஜாராவும் 84வது இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்துள்ளார். சுனில் கவாஸ்கர், சேவாக் ஆகிய இருவரும் 81 இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்கள். அடுத்த வரிசையில் உள்ள டிராவிடுடன் இணைந்துள்ளார் புஜாரா. புராஜாவின் பேட்டிங் சராசரி 52 என்ற அளவில் உள்ளது. எனவே இந்திய அணிக்கு மற்றொரு ராகுல் டிராவிட் கிடைத்துவிட்டார் என புகழ்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications