
வங்கதேச தொடர்
254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொட்டதெல்லாம் தங்கம் என்பது போல அமைந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் 258 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் வங்கதேசத்திற்கு 513 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புஜாரா இன்னிங்ஸ்
இந்நிலையில் இந்தியாவின் இன்னிங்ஸை விட புஜாரா என்ற தனி நபரின் ஆட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் இரும்பு சுவர் என்று கூறப்பட்ட புஜாராவுக்கு கடந்த 3 ஆண்டுகள் மோசமாக இருந்தன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுதான் ஆகும். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார். அதன் பின்னர் 1443 நாட்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாக போராடி வந்தார்.

பிசிசிஐ நடவடிக்கை
ஒரு கட்டத்தில் புஜாராவின் மீது நம்பிக்கையிழந்த இந்திய அணி அவரை புறகணிக்க தொடங்கியது. அவர் கடைசியாக இங்கிலாந்துடன் விடுபட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டார். அதன்பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவிட்டு, அதன்பின்னர் வாருங்கள் என்பது போல புறகணிக்கப்பட்டார். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது என்று கூறலாம்.

சதம் மிஸ்
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய அவர் 90 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டானார். ஆனால் சற்றும் மனம் தளராத அவர் 2வது இன்னிங்ஸில் வேகம் எடுத்தார். இந்த முறை அதிரடியாக ஆடிய அவர் ஒருவழியாக தனது 19வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரின் அதிவேக சதம் இதுதான் ஆகும்.

அதிவேகமான சதம்
வழக்கமாக நிதானமாக விளையாடும் புஜாரா, இந்த முறை வெறும் 130 பந்துகளில் சதத்தை அடித்தார். இதில் முதல் 50 ரன்கள் 87 பந்துகளிலும், அடுத்த 50 ரன்கள் வெறும் 43 பந்துகளில் வந்தவை ஆகும். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இரட்டை சதமும் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்த போது, 512 ரன்கள் போதும் என்று நினைத்த கேப்டன் கே.எல்.ராகுல் டிக்ளெர் செய்துவிட்டார். இதனால் இந்திய அணியில் புஜாராவின் இடம் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











