ராஜ்கோட்: இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் சட்டேஸ்வர் புஜாராவின் சொந்த ஊரான ராஜ்கோட்டில் உள்ள அவரது வீட்டில் டோணி தலைமையிலான இந்திய அணியினருக்கு தடபுடலான இரவு விருந்து அளிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் மனம் தளராத கேப்டன் டோணி தலைமையில் இந்திய அணி அடுத்த போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தற்போது, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில் டோணி தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புஜாரா வீட்டில் நேற்று இரவு உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், விராத் கோஹ்லி, டோணி, ஷிகார் தவான், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா, ரஹானே, ரோஹித் சர்மா, அஸ்வின், புஜாராவின் தந்தை அரவிந்த் புஜாரா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்தப் புகைப்படம் பிசிசிஐ-யின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது
அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா களம் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.