மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள புஜாரா, வரும் காலங்களில் வர்ணனையாளராகவும் பணியாற்றுவேன் என்றும், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 3 வரிசையில் நீண்ட காலமாக ஆடி வந்தவர் புஜாரா. 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்களை விளாசி இருக்கிறார். 2023ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து புஜாரா ஓரம் கட்டப்பட்டார்.

இதன்பின் 2 ஆண்டுகளாக கவுண்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா ஆடி வந்தார். ஆனாலும் இந்திய அணியின் பார்வை புஜாரா பக்கம் திரும்பவில்லை. இதனால் 37 வயதான புஜாரா, 2 நாட்களுக்கு முன்பாக ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பலரும் புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து புஜாராவின் அடுத்தக் கட்டத் திட்டம் என்ன என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடம் புஜாராவுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்து வரும் நிலையில், வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சோனி நிறுவனத்தில் வர்ணனையாளராக புஜாரா பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புஜாரா பேசுகையில், வர்ணனையாளராக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனை நிச்சயம் தொடர்ந்து செய்வேன். ஆனால் பயிற்சியாளராகவோ அல்லது என்சிஏவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக நான் பெரிதாக சிந்திக்கவில்லை. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக முயற்சிப்பேன்.
எப்போதும் கிரிக்கெட்டுக்கு நெருக்கமாக இருக்கவே விரும்புகிறேன். இந்திய அணிக்கு எந்த வழியிலாவது எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல் சமகால கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதை நினைத்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இன்றும் மரபு சார்ந்த பேட்டிங்கிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவை இருக்கிறது.
ஆனால் காலத்திற்கு ஏற்ப பேட்டிங்கும் வளர்ச்சி பெற வேண்டும். இளம் வீரர்களுக்கு சொல்வது ஒன்று தான். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விரும்புங்கள்.. ஏனென்றால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட் அதிகமாக விளையாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பின் புஜாரா என்சிஏ தலைவர் இடத்திற்கு கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.