மும்பை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் புஜாரா ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புஜாரா செய்துள்ள சம்பவங்கள் மற்றும் ஆஸ்திரேலியா பவுலர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இதில் பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் புஜாரா ஓய்வை அறிவித்துள்ளார். அஸ்வின், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை தொடர்ந்து புஜாராவும் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணியில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஆடி வந்த ராகுல் டிராவிட் இடத்தை நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்டவர் புஜாரா.

அப்படியே ராகுல் டிராவிட்டின் நிழலாக ஆடிய புஜாரா, வெளிநாடுகளில் இந்திய அணி அடைந்த ஒவ்வொரு வெற்றிக்கும் மிகப்பெரிய காரணமாக அமைந்தார். மாடர்ன் கிரிக்கெட்டில் ஆக்ரோஷம், டாட்டூ, ஸ்லெட்ஜிங் என்று எந்த விவகாரங்களிலும் ஈடுபடாத ஒரே வீரர் புஜாரா என்று சொல்லலாம். எதிரணி வீரர்கள் எவ்வளவு தூரம் வரம்பு மீறினாலும், புஜாரா பேட்டிங்கில் மட்டுமே கவனம் கொண்டிருப்பார்.
அதிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்றால் விராட் கோலிக்கும் மேல் குஷியாகும் ஒரே வீரர் புஜாராவாக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் 43 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள புஜாரா 2,033 ரன்களை விளாசி இருக்கிறார். 2 இரட்டை சதங்கள், 5 சதங்கள், 11 அரைசதங்கள், 4 ஆட்டநாயகன் விருது, ஒரு தொடர் நாயகன் விருது என்று ஆஸ்திரேலிய அணியை பாடுபடுத்தியவர்.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் மூவரும் கூட்டணியாக இணைந்து பயம் கொண்ட ஒரே வீரர் புஜாரா தான். கடந்த 3 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிய 3 தொடர்களில் 2ல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த 2 தொடர் வெற்றிக்கும் புஜாரா மட்டுமே முதன்மை காரணம்.
கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த போது, அந்த அணியில் புஜாரா சேர்க்கப்படவில்லை. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது. இதனை வெளிப்படையாகவே ஹேசல்வுட், இம்முறை புஜாரா தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அதுதான் புஜாரா ஏற்படுத்தியுள்ள தாக்கம். 2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது புஜாராவை புகைப்படத்தை வைத்து ஆஸ்திரேலியா அணி அனலைஸ் செய்த போது, ஹேசல்வுட் ஒரு கட்டத்தில் கொந்தளித்துவிட்டார். மைதானத்தில் எப்போதும் பார்த்தாலும் புஜாரா இருக்கிறார்.. இப்போது ஓய்வறையிலும் புஜாரா புகைப்படத்தை காட்டுகிறீர்களே என்று ஆவேசமாக பேசிய சம்பவம் எல்லாம் அரங்கேறியது.
ஏனென்றால் 2018 பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1,258 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, 3 சதங்கள் உட்பட 521 ரன்களை விளாசினார். அதேபோல் 2020 பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆடிய புஜாரா 928 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். அதேபோல் 2017ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 525 பந்துகளை எதிர்கொண்டு இரட்டை சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 500 பந்துகளுக்கு மேல் ஆடிய ஒரே பேட்ஸ்மேன் புஜாரா மட்டும் தான். இவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 495 பந்துகளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்னிங்ஸில் ஆடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் இலக்கணத்தோடு ஆடும் வீரரான புஜாராவின் இன்னிங்ஸை, எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது.