மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் புஜாரா அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் புஜாரா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பை, இந்திய அணி இழந்தது. இது குறித்து புஜாராவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த புஜாரா, சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைப்பதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவதாக குற்றச்சாட்டி இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது."
"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆடுகளங்களை நாம் தயாரிக்கின்றோம். ஆனால் முடிவுகள் ஒவ்வொரு போட்டிக்கும் வேறு மாதிரியாக அமைகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஆடுகளம், அது கிடையாது என்று நான் நினைக்கின்றேன். இனிவரும் காலங்களில் பிசிசிஐ ஆடுகளத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்."
"இது போன்ற ஆடுகளத்தை தயாரித்தால் ரன்கள் சேர்ப்பதற்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்படும். திறமை என்பது போட்டியில் இருந்து வெளியே சென்று விடும். தைரியமாக விளையாடி நாற்பது, ஐம்பது ரன்கள் எடுத்தாலே வெற்றியை பெற்று விட முடியும்."
"தற்போது நிலைமை கொஞ்சம் மாறிக் கொண்டு வருகிறது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் கூட தற்போது நல்ல ஆடுகளத்தை தயாரிக்கிறார்கள். இந்திய அணியும் அதே போல் ஒரு ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும். இதற்காக நான் பந்து திரும்பவே கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் மூன்று நான்கு நாட்களில் போட்டிகள் முடிவடைந்த கூடாது என்பதுதான் நான் சொல்கின்றேன்."
"நல்ல ஆடுகளத்தில் விளையாட வேண்டும். போட்டிகள் நான்கு அல்லது ஐந்தாவது நாள் வரை செல்ல வேண்டும்" என்று புஜாரா கூறியுள்ளார். புஜாரா சொன்னது போல் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 108 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 81 விக்கெட்டுகள் சுழற் பந்துவீச்சாளர்களே எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.