மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 'நவீன சுவர்' என்று அழைக்கப்பட்ட செதேஷ்வர் புஜாராவின் திடீர் ஓய்வு அறிவிப்பு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஜாம்பவான்கள் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டி புகழாரம் சூட்டி வரும் நிலையில், அவரது இந்த ஓய்வு முடிவு, இந்திய டெஸ்ட் அணி புறக்கணிப்பு மட்டுமின்றி, உள்ளூர் தொடரான துலீப் டிராபி ஆகியவற்றில் இருந்தும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே எடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய பேட்டிங்கின் அசைக்க முடியாத தூணாகக் கருதப்பட்ட புஜாரா, கடைசியாக 2023-ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார். அதன் பிறகு, அவர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இருப்பினும், மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, மீண்டும் அணிக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேற்கு மண்டல துலீப் டிராபி அணியில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டது, அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் பார்க்கப்பட்டது.
இந்த விவகாரம் பற்றி புஜாராவுக்கு நெருங்கிய ஒருவர் பேசுகையில், "ஒருவேளை அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், புஜாரா அந்தத் தொடரின் முடிவில் ஓய்வு பெற்றிருப்பார். அவரது ஓய்வுக்கு மற்றொரு முக்கியக் காரணி, அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாததுதான்" என்று கூறி உள்ளார்.
மேலும், "டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டது மற்றும் துலீப் டிராபி அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டது ஆகிய இரண்டுமே, சௌராஷ்டிராவுக்காக தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் அர்த்தமில்லை என்பதை அவருக்கு உணர்த்தியிருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடாததால், புஜாராவைப் போன்ற ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரருக்கு, தன்னை நிரூபிக்கவும், உயர் மட்ட கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிக்கவும் உள்ளூர் போட்டிகளே ஒரே வழியாகும். அந்த வழியும் அடைக்கப்பட்டதால், புஜாரா இந்த ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருபுறம் இந்தச் சர்ச்சை வெடித்தாலும், மறுபுறம் புஜாராவின் சாதனைகளுக்கும், அவரது மன உறுதிக்கும் கிரிக்கெட் உலகம் சல்யூட் அடித்து வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், "புஜாரா, நீங்கள் 3-வது வீரராகக் களமிறங்குவதைப் பார்ப்பது எப்போதுமே ஒருவித நிம்மதியைக் கொடுக்கும். 2018-ல் ஆஸ்திரேலியாவில் நாம் வென்ற டெஸ்ட் தொடர் வெற்றி, உங்களின் நம்பமுடியாத மன உறுதி இல்லாமல் சாத்தியமில்லை" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "புயல் வீசியபோது அவர் நிமிர்ந்து நின்றார், நம்பிக்கை மங்கியபோது அவர் போராடினார்" என்று பாராட்டியுள்ளார். யுவராஜ் சிங், "எப்போதும் தனது மனம், உடல் மற்றும் ஆன்மாவை நாட்டிற்காகக் கொடுத்தவர் புஜாரா!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.