டெல்லி: டி20 உலகக் கோப்பையில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. அதாவது கடந்த 10 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும் இந்தியா, தலைமுறை தலைமுறையாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. கடந்த காலங்களில் இந்த அணிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை நாம் பார்க்கலாம்.
கடந்த காலங்களில் இந்தியாவும் சரி, தென் ஆப்பிரிக்காவும் சரி ஐசிசி தொடர்களில் லீக் போட்டிகளில் தாறுமாறாக விளையாடினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்தியா: இதில் நாம் முதலில் இந்தியா குறித்துப் பார்க்கலாம். கடந்த 2013இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்றது. தோல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கும். அதில் நம்ம அஸ்வின் தான் கடைசி ஓவரை வீசி இருப்பார். அதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை தட்டி தூக்கி இருக்கும். அதுவே நாம் வென்ற கடைசி ஐசிசி டிராபியாகும். அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதே இல்லை.
கடந்த 2014இல் நடந்த டி20 இறுதிப் போட்டியில் இந்தியா அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 130 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்துப் பேட் செய்த இலங்கை 18ஆவது இலக்கை அடைந்தது.
தோல்விகள்: 2016 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா வீழ்ந்தது. இந்திய அணி 192 ரன்களை அடித்திருந்த நிலையில், அதைக் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்து வெற்றி பெற்றது.
டி20 போட்டிகளில் மட்டும் இந்த கதை என்று இல்லை. 50 ஓவர்களிலும் இதே கதை தான். கடந்த 2017இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இறுதிப் போட்டி நடந்தது. அதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 338 ரன்களை விளாசியது. அடுத்துப் பேட் செய்த இந்திய அணியால் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
தல தோனி: அடுத்து 2019இல் நடந்த உலகக் கோப்பை தொடர். இதில் அரையிறுதி உடன் நமது கனவு முடிவுக்கு வந்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 239 ரன்கள் எடுத்து இருக்கும். அடுத்துப் பேட் செய்த இந்தியா 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நம்ம தல தோனியின் கடைசி சர்வதேச போட்டி இதுதான்.
அடுத்து 2022இல் நடந்த டி20 உலக கோப்பை. அதில் முதலில் பேட் செய்த இந்தியா 168 ரன்களை எடுத்து இருந்தது. அதை 16 ஓவர்களில் எட்டி பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசால்டாக வென்று இருக்கும். இந்திய அணியால் கடைசி வரை ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இந்த தோல்விக்குத் தான் இப்போது இந்தியா பழி தீர்த்துக் கொண்டுள்ளது.
அதேபோல கடந்தாண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 50 ஓவர் இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வீழ்ந்தது. அந்தப் போட்டியில் இந்தியா 240 ரன்களை எடுத்த நிலையில், அதை 43 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா எட்டி பிடித்தது. இது தவிர இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்கா: 2021இல் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா, 2023இல் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்படிக் கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர் முழுக்க நன்றாக ஆடினாலும் அரையிறுதி, இறுதி என நாக் அவுட் போட்டிகளில் இந்தியா சொதப்புவது தொடர்கதையாக இருக்கிறது. அதேநேரம் நமக்கு எதிராகக் களமிறங்கும் தென் ஆப்பிரிக்கா நம்மை விட மோசம். நாம் 10 ஆண்டுகளாகச் சொதப்புகிறோம் என்றால் அவர்கள் காலம் காலமாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பியே வருகிறார்கள்.
கடந்த 1992 முதலே பல முறை அவர்கள் 50 ஓவர் உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வெளியேறி உள்ளனர். 1992இல் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அடுத்து 1996இல் கராச்சியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்து. 1999இல் பர்மிங்காம் நகரில் ஆஸ்திரேலியா உடனான அரையிறுதி சமனில் முடிந்த நிலையில், முந்தைய சுற்றின் முன்னிலையில் இருந்த அணி என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் சென்றது.
படுதோல்விகள்: அடுத்து 2007இல் செயின்ட் லூசியாவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, 2011இல் மிர்பூரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2015இல் ஆக்லாந்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, 2023இல் கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
அதேபோல டி20களில் 2009இல் நாட்டிங்காமில் நடந்த அரையிறுதியில் பாகிஸ்தான் உடனும், 2014இல் மிர்பூரில் நடந்த அரையிறுதியில் இந்திய அணிஉடனும் தோல்வி அடைந்தது. இப்படி நான் அவுட் போட்டிகளில் சொதப்புவதைத் தென் ஆப்பிரிக்காவும் வாடிக்கையாகவே கொண்டுள்ளது.
எஸ்கேப் ஆவது யார்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டி கடந்த 10 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும் அணிக்கும் தலைமுறை தலைமுறையாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும் அணிக்கும் இடையே நடக்கிறது. இதில் எந்த அணி தனது வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.