சிட்னி: தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பெண் செய்தியாளரிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய செயலுக்கு கெய்ல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் உள்ளூர் டி-20 போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் விளையாடிய கிறிஸ் கெயில் 15 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.. இடைவேளையின் போது, தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பெண் செய்தியாளர் மெல் மெக்லாலின் என்பவர் கெயிலிடம் பேட்டி எடுத்தார்.

அப்போது கெயில் அவரிடம் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. "நானே உங்களிடம் வந்து பேட்டி கொடுக்க விரும்பினேன். அதன் காரணமாகவே உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். இட்ஸ் நைஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அதன் பிறகு நாம் மது அருந்தலாம், பேபி, என்று பேசியுள்ளார்.
இதையடுத்து பெண் செய்தியாளரை கெயில் அவமானப்படுத்தி விட்டதாகவும், இதற்காக அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து, கெய்லின் நடவடிக்கையைக் கண்டித்து அவருக்கு ரூ.6,65,409 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகை, மெக்ராத் நடத்தும், புற்று நோய் அமைப்புக்கு வழங்கப்படும் என்று ரெனிகேட்ஸ் அணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கெயில் பேசும்போது, மெல் மெக்லாஃப்லினுடன் தான் நகைச்சுவையாகவே அவ்வாறு பேசியதாகவும், களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் கூறியுள்ளார். தனது பேச்சு மெக்லாஃப்லின்னை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.